கரூரைக் கைப்பற்றக் கடும் போட்டி.. சீட் கிடைக்காதவர்கள் போர்க்கொடி
கரூர்: கரூர் தொகுதியை கைப்பற்ற நடைபெற்ற கடும் போட்டியில், கடைசியில் மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜோதிமணி சீட்டை கைப்பற்றியுள்ளார்.
தமிழகத்தில், அதிமுக , திமுக போன்ற திராவிட கட்சிகளின் தலைமையில் தனித்தனி அணியும், தேசிய கட்சிகளான பாஜக , கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தனித்தனி அணிகளும் களத்தில் உள்ளது.
இந்த நிலையில் , திமுக கூட்டணியில் நீடித்து வந்த காங்கிரஸ் கட்சியை திமுக அதன் பொதுக்குழுவில் வைத்து இனி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது. ஆனால், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும், திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தமிழகம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். ஆனாலும், திமுக இறங்கி வரமறுத்துவிட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மற்றும் முன்னாள் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.
மேலும், கூட்டணி இல்லை என்றால் கரை சேருவது கடினம் என கட்சி முன்னணி நிர்வாகிகள் பலரும் ஒதுங்க ஆரம்பித்தனர். இந்த தகவல் தலைமைக்கு தெரிய வரவே, போட்டியிடவே ஆள் இல்லை என்றால் கட்சிக்கு பெரிய அவமானம் என கருதி, போட்டியிடும் நபர் ஒருவருக்கு தலா பத்து கோடி வழங்கப்படும் என தலைமை சிக்கனல் காட்டியது. இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிட பலத்த போட்டி ஏற்பட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதலாவது பட்டியலில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், திருச்சியில் சாருபாலா தொண்டமானும், திண்டுக்கலில் என்.எஸ்.வி. சித்தனும், கடலூரில் கே.எஸ். அழகிரியும், திருப்பூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யரும் , கோவையில் ஆர். பிரபு என என 30 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
அடுத்து , இரண்டாவது பட்டியலை, காங்கிரஸ் டெல்லி மேலிடம் மார்ச் 24 ம் தேதி வெளியிட்டது. அதில், மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் தருமபுரியிலும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் விக்டரி எம்.ஜெயக்குமார், பொள்ளாச்சியில் கே.செல்வராஜ் ஆகிய மூன்று பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
ஆனால், கரூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது.
கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன், மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜோதிமணி மற்றும் கரூர் நகர் மன்ற கவுன்சிலர் ஸ்டீன் பாபு ஆகியோர் பெயர்கள் அடிபட்டது.
இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள பேங்க சுப்பிரமணியன், சிதம்பரம் கோஷ்டியை சேர்ந்தவர். சிதம்பரம் மூலம் பாண்டியன் கிராம வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவரது மகன் ஜெகதீ்ஷ் கரூர் நகர் மன்ற கவுன்சிலராக உள்ளார்.
ஏற்கனவே, கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, கரூர் தொகுதி அல்லது நாமக்கல் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தினார். ஆனால் கிடைக்கவில்லை. பைனாஸ் தொழில் நடத்தும் பேங்க் சுப்பரமணியன் சிதம்பரம் மூலம் சிட் பெற்றே தீருவது என உறுதியாக உள்ளார்.
மறுபக்கம், கரூர் சட்ட மன்ற தொகுதியில், தற்போதைய அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு, சுமார் 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் ஜோதிமணி. ஆரம்பத்தில் சிதம்பரம் அணியில் இருந்தவர் ஜோதிமணி. தற்போது தனித்து செயல்படுகிறார்.
தற்போது ஜோதிமணி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், மகிளா காங்கிரஸ் செயலாளர் என்ற பதவியை வகித்து வருகின்றார். ஏற்கனவே ராகுல் காந்தியின் குட்புக்கில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. எந்தக் கோஷ்டியிலும் இல்லாதவர் என்பதும் இவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது.
இந்த நிலையில் ஜோதிமணிக்கு நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என பேங்க்.சுப்பிரமணி அணி போர்க்கொடி தூக்கியுள்ளது. மேலும், பேங்க்.சுப்பிரமணி நின்றால் நானும் வேலை பார்க்க மாட்டேன் என ஜோதிமணியும் பதிலுக்கு மல்லுகட்டியுள்ளார். இதனால் கரூர் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் எப்படி நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications