கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகளுக்கு திருமணம்... விழுப்புரம் டாக்டரை மணக்கிறார்
சென்னை: திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் மாப்பிள்ளையை தனது தம்பி மகளுக்கு பார்த்திருக்கிறாராம் கே.என். நேரு.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012ம் ஆண்டு திருச்சியில் படுகொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை கொலையாளியை போலீஸ் பிடிக்கவில்லை.
கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, ராமஜெயத்தின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். கொலையாளியை கண்டுபிடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தம்பியின் மரணத்தால் ரொம்பவே கலங்கி விட்டார் கே.என். நேரு. வீட்டில் சைவ சாப்பாடு செய்தாலும் நேரு மட்டும் வெளியில் செல்லும் இடங்களில் அசைவம் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. தம்பி ராமஜெயத்தின் மரணத்திற்குப் பின்னர் நான்கு ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டாராம்.
லால்குடி தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளிய நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. விவசாயக் குடும்பம். தேசம் அறிந்த தலைவரான ஜவஹர்லால் நேருவைப்போல வர வேண்டும் என்பதற்காக நேரு என்று பெயரைவைத்தார் அப்பா. பி.யூ.சி. வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியல் ஆசை வந்தது.
அந்த நேரத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் முடிவெடுத்து இருந்தார். புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்கவே, அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றி பெற்ற தேர்தல் அது. சுமார், 10 ஆண்டு காலம் முடங்கிக்கிடந்த கட்சி மீண்டும் செழிக்க ஆரம்பித்தது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து நகர்பாலிகா என்று ஏராளமான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திருப்பிவிட்ட காலமும் அதுதான்.
பிரதமர் ராஜீவ்காந்தியை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு நேருவுக்குக் கிடைத்தது. "உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்" என்று சொல்லி, பிரதமரின் கவனத்தைக் கவர்ந்த நேரு, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்தல். எம்.எல்.ஏ. ஆசை துளிர்த்தது. லால்குடி தொகுதியில் சொந்த செல்வாக்கும் சாதி வாக்காளர்களின் உதவியும் நேருவை வெல்லவைத்தது. நல்ல காலம் நேருவுக்கு ஆரம்பித்தது. மின் துறை அமைச்சராக நேரு இணைந்தார். நேருவின் இரண்டு கைகளாக இருந்தனர் அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.
ராமஜெயம் திருச்சியில் மணல் மற்றும் கிரானைட் தொழிலில் மத்தியத் தமிழ்நாட்டில் முக்கியப் பிரமுகரராக வலம் வந்தார். இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் இவரை இணைத்து அறிக்கை மூலமாக ஜெயலலிதா குற்றம் சாட்டும் அளவுக்கு ராமஜெயத்தின் வளர்ச்சி இருந்தது.
ராமஜெயமும் அவரது உறவினரான வினோத் என்பவரும்தான் நேருவின் கல்லாப் பெட்டிகளாக இருந்தனர். தொழில், வருமானம் என இருந்தாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது பதவி வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராமஜெயம்.
பெரம்பலூர் எம்.பி. தொகுதியை ராமஜெயத்துக்கு வாங்கிக் கொடுக்க விரும்பினார். மருமகன் நெப்போலியன் மல்லுக்கு நின்றார். நெப்போலியனுக்கு கருணாநிதி வாய்ப்பு வழங்க, அந்த மோதல் கனன்றுகொண்டே இருக்கிறது. அடுத்த தம்பி, என்.ரவிச்சந்திரனின் பெயரைவிட, அவர் நடத்தி வரும் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், பல்வேறு மாநகரங்களை வளைத்து வளர்ந்தது.
2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. மரியம் பிச்சையிடம் தோற்றுப் போனார் கே.என். நேரு. சில மாதங்களில் சிறைக்குப் போனார். அப்போதே துடித்துப் போனார் நேரு. ஜாமீனில் வெளி வந்த ராமஜெயம், 2012ம் ஆண்டு மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தனது உடம்பில் இருந்து ஒரு கை வெட்டப்பட்டு விட்டது போல துடித்துப் போனார்.
தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்காத வரை தாடி எடுக்கமாட்டேன் என்று சபதமே போட்டார். 4 ஆண்டுகள் உருண்டு விட்டன. கொலையாளி யார் என்றும் கொலைக்கான காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சோகம் நிரம்பிய ராமஜெயத்தின் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோச சம்பவம் நடைபெற உள்ளது.
ராமஜெயத்தின் மகள் ஸ்ரீஜனனி. எம்.பி.ஏ. படிப்பை முடித்துள்ளார் அவருக்கு விழுப்புரம் மாவட்டம் சேர்ந்த டாக்டர் விவேக் என்பவரை பெரியப்பா நேரு தேர்வு செய்தாராம். இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு, திருச்சியில் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது. வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.