மறுக்கப்படும் ஜாதிச் சான்றிதழ்.. மதம் மாறும் முடிவில் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள்!
செங்கோட்டை: தங்களது சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து ஜாதித் சான்றிதழ் மறுக்கப்பட்டு வருவதால் கூண்டோடு மதம் மாற காட்டுநாயக்கன் இன மக்கள் முடிவு செய்துள்ளனர்.
செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளை பூர்வீகமாக கொண்டு வாழும் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சார்ந்த மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த 25ஆண்டுகாலமாக தங்களது வாழ்வாதாரம் உயரும் வண்ணம் கனவுகளோடு வாழ்ந்தாலும் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்று 10ஆம் வகுப்புவரை கல்வி கற்றும் அவர்கள் மேற்க் கொண்டு கல்வி கற்க முடியாமல் பாதியிலேயே அவர்கள் எதிர்காலம் பறிபோய் விடுவதாகவும்,இந்த நிலைக்கு காரணம் தங்கள் எந்த அடிப்படை அரசின் உதவிகளை பெறமுடியாமல், பிற மக்களைப் போல் சமூகத்தில் உயரமுடியாமலும் இருப்பதற்கு தாங்களது "காட்டு நாயக்கன்"சமுதாயம் அரசின் பழங்குடியினபட்டியலில் இல்லாததே என்று இவர்கள் குமுறுகின்றனர்.
இந்த சமூகத்தவர்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வருவாய்த்துறையினரால் வழங்கப்படவில்லை. இந்த சமுதாயத்தின் மக்கள் சங்கரன்கோவில்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாதி சான்றிதழ்கள் "காட்டு நாயக்கன்"சமுதாயம் என்றப் பெயரில் பெற்றுள்ளனர்.
ஆனால் தென்காசி வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட மேற்க்கண்ட பகுதிகளில் மட்டும் தான் இந்த குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்தோடு செங்கோட்டைத் தாலுகா இணைக்கப்பட்ட போது யார்..யார் எந்த இனத்தை சார்ந்தவர்கள் என்று அரசு கெஜட்டில் ஜாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
"காட்டுநாயக்கன் சமுதாயம்" பெயரில் இந்த தாலுகாவில் வேறு ஒருஜாதியினர் சான்றிதழ்கள் பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு குழப்பங்கள் இந்த சான்றிதழ் விவகாரத்தில் உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட இந்த சமுதாய மக்கள் அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் தங்களுக்கு விடிவு வேண்டி கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் பல்வேறு போராட்டங்களை நடத்தியும்,நீதிமன்றத்தை அணுகியும் நிவாரணம் கிடைக்கததால் தற்போது சுமார் 2ஆயிரம் குடும்பங்கள் வரும்ஜனவரி 26ந்தேதி மதம் மாற உள்ளதாக தெரிவித்துள்ளனர். மதம் மாறினால்தான் தங்களது குடும்பத்தினர்கள் உயர் கல்வியை பெற முடியும் என்று தெரிவித்தனர்.