பாஜகவுடனான பாமக கூட்டணிக்கு 'செக்' வைக்கும் காடுவெட்டி குரு?
சென்னை: பாமகவின் மூத்த தலைவர் காடுவெட்டி குரு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாரதிய ஜனதா கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைக்காது என்று கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த 2 ஆண்டுகாலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதி சங்கத் தலைவர்களை ஒருங்கிணைந்தார். பின்னர் சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற அமைப்பும் உதயமானது.
இந்த சமூக ஜனநாயக கூட்டணியின் சார்பில் லோக்சபா தேர்தலை பாமக எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பச்சமுத்துவோ, பாமகவை பாஜக பக்கம் இழுப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
ராஜ்நாத்- அன்புமணி சந்திப்பு
இந்நிலையில்தான் திடீரென டெல்லி சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் ராஜ்நாத்தை நேரில் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக அணியில் பாமக இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகின.
பாஜக அணியில் பேச்சுவார்த்தை
பாஜக அணியில் பரம வைரியான தேமுதிக இடம்பெற்றாலும் கூட அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அளவுக்கு பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற பாமக தலைமை பொதுக்குழுவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
மோடி அலையெல்லாம் இல்லை- காடுவெட்டி
ஆனால் பொதுக்குழுவில் பேசிய காடுவெட்டி குரு, மோடி அலையெல்லாம் வீசவில்லை.. பாஜக கூட்டணி வேண்டாம் என்று அதிரடி காட்டினார். பொதுக்குழுவின் முடிவிலும் எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. பாமக உருவாக்கிய சமூக ஜனநாயகக் கூட்டணி பற்றி மட்டுமே பேசப்பட்டது.
பாஜக அணியில் இல்லை?
இதனால் பாஜக அணியில் பாமக இடம்பெறுவது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பாமகவின் மூத்த தலைவரும் வன்னியர் சங்கத்தின் தலைவருமான காடுவெட்டி குருதான், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்.. இதுநாளும் கூறியபடியே தேசிய கட்சி- திராவிட கட்சியுடன் கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடுவோம் என்பதில் உறுதியோடு நிற்போம் என அழுத்தம் கொடுத்ததுடன் பிடிவாதமும் காட்டியிருக்கிறார்.
அன்புமணி பிடிவாதம்
இதை ஏற்றுக் கொண்டுதான் பாமக நிறுவனர் ராமதாஸும் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அன்புமணி தரப்போ எப்படியாவது பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் மீண்டும் அமைச்சராகிவிட வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்கத்தான் இன்னும் நிறைய காட்சிகள் அரங்கேறும் என்கின்றன பாமக வட்டாரங்கள்.