கலாம் விருதை "இஸ்ரோ" வுக்கு சமர்ப்பிக்கிறேன்... திட்ட இயக்குநர் வளர்மதி பெருமிதம்
சென்னை : அப்துல்கலாம் பெயரிலான விருதை இஸ்ரோவுக்கு சமர்ப்பிப்பதாக அந்த விருதை முதன்முதலாகப் பெற்ற திட்ட இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இந்த விருது இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநரான என்.வளர்மதிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
விருதுபெற்ற பிறகு என்.வளர்மதி கூறியதாவது...
''எனது சொந்த ஊர் அரியலூர். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அண்ணா பல்கலையில் எம்.இ., முடித்தேன். இஸ்ரோவில், 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ரேடார் இமேஜ் சாட்டிலைட்' திட்ட இயக்குநராக பணியாற்றினேன். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது. இதனால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
அப்துல் கலாம் பெயரில் விருது வழங்குவதன் மூலம் தமிழக அரசு இஸ்ரோவை பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருது, இளைஞர்களை உற்சாகப்படுத்தும். பொதுச் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவது பெருமை தரக்கூடியது. இந்த விருதை இஸ்ரோவுக்கு சமர்ப்பிக்கிறேன். விருதை வழங்கிய முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
இவ்வாறு கலாம் விருது பெற்ற வளர்மதி தெரிவித்தார்.