ஓட்டு போடுங்க மக்களே: தேர்தல் கமிஷனுக்காக கமல்- கவுதமி பிரச்சாரம்
சென்னை: நடிகர் கமல், நடிகை கவுதமி ஆகியோர் மக்களை வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளும் விளம்பரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களை கவர மேள, தாளத்தோடு வருகிறார்கள்.
இந்நிலையில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையமும் களத்தில் இறங்கியுள்ளது. உலக நாயகன் கமல், நடிகைகள் கவுதமி, ரோகிணி ஆகியோரை வைத்து வாக்காளர்களை தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றக் கூறி விளம்பர வீடியோ ஒன்றை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.
அந்த வீடியோவை பிரச்சார வாகனம் போன்ற ஒன்றில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பி வருகிறது. பொது மக்கள் கூடும் இடங்கள், மால்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த விளம்பர வாகனத்தை தேர்தல் அதிகாரி அருண் சுந்தர் தயாள் துவங்கி வைத்தார். அந்த வாகனத்தில் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்துள்ளோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த எந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்தி தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்துள்ளோம் என்பதை பார்த்து வருகிறார்கள். மக்கள் ஒரு சின்னத்தை தேர்வு செய்து அதற்கான பட்டனை அழுத்திய 7 நொடிக்குள் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.