டிஜிட்டல் யுகத்தில் இங்கிருந்தே எழுதலாமே... நீட் தேர்வு குறித்து கமல் கருத்து!
நீட் தேர்வுகளை தமிழக மாணவர்கள் இங்கிருந்தே எழுதலாமே. டிஜிட்டல் யுகத்தில் அதற்கான வசதியை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது சரி என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2018
இந்த டிஜிட்டல், இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யும் அரசும் ஆணையும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.