தனிக்கட்சி துவங்கப்போகிறேன்.. கமல் அதிரடி பேட்டி!
சென்னை: தனிக்கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஏற்கனவே இதுகுறித்து வெளியான யூகங்கள் உண்மைதான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தி குயன்ட் (The Quint) வெப்சைட்டுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

தமிழகத்தில் தொடக்கம்
அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏன் தமிழகம் என கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்குகலாம் என்று நினைக்கிறேன். அதேநேரம், மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை.

சந்தர்ப்பவாதிதான்
என்னை சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். ஆம், நான் சந்தர்ப்பவாதிதான். இதுதான், நான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான சந்தர்ப்பம். ஏனெனில் அனைத்துமே தவறாக சென்றுகொண்டுள்ளது. நமக்கு சிறந்த அரசு தேவைப்படுகிறது. நான் அவசரகதியில் தீர்வுகள் கிடைத்துவிடும் என சொல்லவில்லை. மாற்றத்தை நான் முன்எடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.

தனிக்கட்சிதான்
அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கப்போவது கிடையாது, கட்டாயத்தின்பேரில் நடக்கப்போகிறது. ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை.

அரசியல் மாற்றம்
சசிகலாவை அதிமுக பதவியிலிருந்து வெளியேற்றியது மாற்றத்திற்கான வலிமையான நடவடிக்கை என்றுதான் பார்க்கிறேன். ஆனால் இது ஒரு தொடக்கம்தான். தமிழக அரசியல் மாறி வருகிறது என்ற எனது நம்பிக்கைக்கு இது உரம் சேர்க்கிறது.

உடனேயே நீக்க வேண்டும்
இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால், இதில் மாற்றம் வரவேண்டும், ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று கருதுகிறேன். 5 வருடம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல்படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்துதான் ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும். அப்படி செய்தால்தான் அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும்.

ஊழல் இருக்காது
சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். இம்மாத இறுதிக்குள் கமல் புதுக்கட்சி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications