டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அந்தமானுக்குப் போய் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனமாக சுற்றுலாவாக அந்தமான் போன இடத்தில் மரணத்தைத் தழுவிய காஞ்சிபுரம் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி செல்வராஜ். இவர் பூஜா டிராவல்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பல ஊர்களுக்கும் இவரது நிறுவனம் சுற்றுலா மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இம்மாதம், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு நடந்தது. இதில், முன்பதிவு செய்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 ஆண்கள், 13 பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 32 பேர், சுற்றுலாவிற்கு சென்றனர்.
அனைவரும் கடந்த 23ம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து வேன் மூ்லமாக சென்னை வந்தனர். அங்கிருந்து விமானம் மூலம் அந்தமான் புறப்பட்டனர். அந்தமாவன் வந்து சேர்ந்ததும், அவர்களுடன் இவர்களது உறவினர்கள் சிலர் மும்பையிலிருந்து வந்து இணைந்து கொண்டனர்.
ராஸ் தீவு, நார்த் பே தீவு, வைப்பர் தீவு, போர்ட்பிளேர் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க படகில் கிளம்பினர்.
இந்தக் குழுவில் செல்வராஜ், 64, அவரது மகன் மணிகண்டன், 35, மருமகள் உஷா, 30, பேத்தி பூஜா, மகள் கீதா; சுரேஷ்சா, 36, அவரது மனைவி நித்யாபாய்,26, மகள்கள் தர்ஷினி, 7, வினோதினி, 3, அவரது தாயார் சாந்தாபாய், 65, மாமியார் சாந்திபாய்; மணி, 33, அவரது மனைவி உஷா, 30, மகள் பூஜா, 3; தியாகராஜன், 60, அவரது மனைவி அனுராதா, 54, கணபதி, 64 உள்ளிட்டோரும், இவர்களில் சிலரது உறவினர்கள் என மொத்தம் 45 பேர் படகில் பயணித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் ராஸ் தீவிலிருந்து நார்த் பே தீவுக்கு திரும்பினர். அப்போதுதான் கடலில் கவிழ்ந்தது படகு.
விபத்தில் சிக்கி உயிர் தப்பிய தியாகராஜன் கூறுகையில், எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. அப்படியே கவிழ்ந்தது படகு. எனக்கு எதுவுமே புரியவில்லை. கடவுள் அருளால் நான் உயிர் பிழைத்தேன் என்றார். காஞ்சிபுரம் குழுவைச் சேர்ந்தவர்களில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் மீட்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல டூருக்கு ஏற்பாடு செய்தவரான செல்வராஜ் குருசாமி கூறுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற, 32 பேரும், ஒரே படகில் தான் நேற்று காலை சென்றோம். வழக்கமாக, மெரினா பார்க் அருகே உள்ள, அபரிஞ்ச் ஜெட்டி என்ற பகுதியில் இருந்து தான் சுற்றுலா பயணிகள் செல்வர். அங்கிருந்து, ராஸ் தீவு, 1 கி.மீ., தூரத்தில் தான் உள்ளது.
நேற்று, குடியரசு தினம் என்பதால், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியான, அபரிஞ்ச் ஜெட்டி பகுதியை மூடிவிட்டனர்.இதனால், சாத்தம் ஜெட்டி என்ற பகுதியில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிருந்து ராஸ் தீவு, 5 கி.மீ., தூரம் அதிகம் என்பதால், திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அபரிஞ்ச் ஜெட்டியில் இருந்து சென்றிருந்தால் சீக்கிரமே திரும்பியிருப்போம்; இதுபோன்ற விபத்தும் நடந்திருக்காது. நான் தப்பினேன்; என் மனைவி, குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் அவர்.
உயிர் தப்பிய 16 பேர்
இந்த விபத்தில் சிக்கிய அதிர்ஷ்டவசமாக 16 பேர் உயிர் தப்பினர். செல்வராஜ் குருசாமி, ஜெயபாலன், பத்மினி, கஜேந்திரன், வள்ளி, பூஜா பாய், கங்கா, தியாகராஜன், வினோதினி, கோபால், சிவநாதம், பிரீத்தி, குமரகுரு நாதன், ரங்கநாதன், செல்வராஜ் மற்றும் சுப்ரமணி ஆகியோரே இவர்கள்.