கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி.. சட்டத்தை கையில் வச்சு என்ன சார் பண்ணப் போறோம்?
கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி,ராக்கெட் வட்டி என பல வகைகளில் வட்டிக்கு பணம் வாங்கி சுழலில் சிக்கி உயிரை விடுகின்றனர் அப்பாவி மக்கள்.
Recommended Video
சென்னை: வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது பாவம் என்று கூறினாலும் அந்த வட்டி தொழிலை வைத்து கோடீஸ்வரர்களாக ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள். வட்டிக்கு வாங்கியவர்களோ பணத்தை கட்ட முடியாமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்தனர். இதில் அப்பாவி பெண்ணும், இரு குழந்தைகளும் கருகி உயிரிழந்து விட்டனர்.
கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். பலரோ தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003இல் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரியவில்லை.
சிக்கும் அப்பாவிகள்
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கூறுவார்கள். கடன் பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு சுழலில் சிக்கிக் கொள்கின்றன.
வட்டி எத்தனை வட்டியடா?
கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி,தினவட்டி, ராக்கெட் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் உள்ளது. வட்டிக்கு பணம் வாங்கும் பல அப்பாவி மக்கள்தான் பலியாகி வருகின்றனர்.
தோல் தொழிலாளர்கள்
திண்டுக்கல் மற்றும் சின்னாளபட்டி பகுதியில் இருந்து கந்துவட்டி கும்பல் பணம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.
1000 ரூபாய்க்கு வாரத்திற்கு 100 வட்டி வாங்கப்படுகிறது. 5 ஆயிரம் ரூபாய் தேவை எனில் அவர்களது வீட்டு பட்டா மற்றும் ரேசன் கார்டு போன்ற ஏதாவது ஒரு பொருளை அடமானமாக வாங்கி வைத்து விடுகின்றனர்.
தவிக்கும் தொழிலாளர்கள்
ஒரு வாரம் வட்டி தர தாமதித்தால் அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். நெசவு தொழிலாளர்கள் தோல் தொழிலாளர்கள் வேறு வழியின்றி வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சென்றாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் மிரட்டி வருகின்றனர்.
மீட்டர் முதல் மின்னல் வட்டி வரை
ஏழை மக்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்களும் வட்டிக்கு பணம் வாங்கி சிக்கிக்கொள்கின்றனர் இவர்கள் அதிகம் மீட்டர் வட்டிக்குதான் பணம் வாங்குகின்றனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு 85 ஆயிரம் மட்டுமே கொடுப்பார்கள். வாரம் 10 ஆயிரம் வீதம் 10 வாரங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கட்ட வேண்டும். ஒருவாரம் தாமதித்தாலும் வட்டி இருமடங்காகும்.
ரன் முதல் ராக்கெட் வரை
வாங்கும் பணத்திற்கு மணிக்கணக்கு போட்டு வாங்கும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. 1000 ரூபாய் பணம் வாங்கிவிட்டு தினம் 100 வீதம் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாய் திருப்பி தருவது ராக்கெட் வட்டி. இது சிறுவியாபாரிகள் அதிகம் இந்த வட்டியில் சிக்கிக் கொள்கின்றனர்.
வாரத்திற்கு 2 ஆயிரம் வட்டி
மாத வட்டி, வார வட்டி, தவணை வட்டி என கந்து வட்டிகள் பல இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப கம்யூட்டர் வட்டியும் இருக்கிறது. அதாவது ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக்கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பி செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதுதான் கம்யூட்டர் வட்டி.
கோடீஸ்வர வட்டி முதலைகள்
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துககுடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்தன.
சட்டம் சொல்வது என்ன?
கடன் பெற்றவர்களிடம் மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, மணி நேர வட்டி, தண்டல் என வட்டிப் பணம் வசூலிப்பவர்களை ஒடுக்கும் விதமாகவும், வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றவும் கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்தச் சட்டம் தொடர்பான ஆணை, கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதிஅரசிதழில் வெளியிடப்பட்டது.
அரசிதழில் வெளியிட்ட ஜெயலலிதா
தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்
வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு வருடம் முழுவதும் தவிக்கும் அப்பாவி மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அப்பாவிகளை காக்க கந்து வட்டி தடுப்பு சட்டம் மூலம் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் சோகம். ஜெயலலிதாவிற்கு பிறகு சாட்டையை சுழற்றும் சரியான முதல்வர் இல்லாததே அப்பாவி உயிர்கள் பலரின் உயிர் பறிபோக காரணமாக அமைந்துவிட்டது.