குமரியில் பின்னோக்கி வந்து பிளாட்பார்மை உடைத்த ரயில்: பெரும் விபத்து தவிர்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பின்னோக்கி வந்த ரயில் நடைமீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நடந்த போது நடைமேடையில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
இன்று காலை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பெங்களூருக்கு புறப்படுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று (வண்டி எண் 16525 ). எஞ்சின் மாற்றுவதற்காக இந்த ரயில் 3 ஆவது நடைமேடையில் இருந்து அருகில் இருந்த கூடுதல் நடைமேடைக்கு காலை 7.45 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக ரயில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அதிவேகமாக பின்நோக்கி வந்த ரயில், தண்டவாளத்தை உடைத்து நடைமேடையின் மேல்பகுதியை சேதப்படுத்தியது. இதில் ரயில் பெட்டியின் அடிப்பகுதியில் உள்ள பாகங்கள் உடைந்தன.
ரயிலின் பின்பகுதி மோதியபோது, அதிர்ஷ்டவசமாக அந்த நடைமேடையில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்நிலைய பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘வழக்கமாக எஞ்சின் மாற்றுவதற்காக ரயில் பின்நோக்கி வரும் போது 10 கி.மீ வேகத்திலேயே இயக்கப்படுவது வழக்கம். ஆனால் விபத்தை ஏற்படுத்திய இந்த ரயில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதி நடைமேடையை உடைத்து சேதப்படுத்தியது. ரயில் மோதிய நின்ற பகுதியில் எப்போதும் பயணிகள் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது' என்றார்.
இந்த விபத்து குறித்து ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கன்னியாகுமரி ரயில்வே போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர்.