தாக்குதல் எதிரொலி- கர்நாடகா வாகனங்கள் எல்லையோடு நிறுத்தம்... இருமாநில போக்குவரத்தும் துண்டிப்பு!!
ஓசூர்: தமிழகத்தில் கர்நாடகா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் அம்மாநில வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ஒரு வார காலம் போராட்டம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் கர்நாடகாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ராமேஸ்வரத்திலும் சீர்காழியிலும் கர்நாடகா பதிவு எண் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ராமேஸ்வரத்தில் கர்நாடகா ஓட்டுநர் ஒருவரும் தாக்கப்பட்டார்.
இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் ஓசூர் அத்திப்பள்ளி எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம்- கர்நாடகா இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஒட்டுமொத்தமாகவே தமிழகம்- கர்நாடகா இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.