"அவங்க கூப்பிட்டாக...இவங்க கூப்பிட்டாக...": டி. ராஜேந்தர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தன்னை அழைத்து கூட்டணி வைப்பது பற்றி பேசும் அளவுக்கு தனது தகுதியை வளர்த்துள்ளதாக நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார். கருணாநிதியை சந்தித்து விட்டு வந்ததை, "வாசமில்லா மலர் இது.. வசந்ததைத் தேடுது..." என்று பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராஜேந்தர். அப்போது, கருணாநிதி தமிழகத்தை 5 முறை ஆண்டவர். அவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல பிரதமர்களை சந்தித்தவர். அவர்களுடன் அரசியல் நடத்தியவர். மேலும் அவர் அரசியல் பாரம்பரியம் மிக்க தலைவர். அவர் என்னை அழைத்து பேசியது பெருமையாக உள்ளது.
"நான் வாசமில்லாத மலரா...வசந்ததைத் தேடி அலைகிறேனா?" என்று கேட்டவர், "கருணாநிதியின் சந்தி்ப்பு அரங்கேறியது ஒரு காட்சி. அதற்கு பிறகு நடக்கப்போவதை பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்வேன் சாட்சி!" என்றார் வழக்கம் போல.
அப்போது, ஒரு நிருபர், நீங்கள் தி.மு.க.வில் இருக்கிறீர்களா... இல்லையா? என்று கேட்டார். அதற்கு கோபமாக பதிலளித்த ராஜேந்தர், அதை ஏன் உங்ககிட்ட சொல்லணும்?. கருணாநிதியை சந்தி்த்து பேசியதை கேவலப்படுத்துகிறீர்கள். அன்றைக்கு மூன்று ரூபாய்க்காக உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று தி.மு.க.விலிருந்து தூக்கி எறிந்தார்களே? அன்றைக்கு எனக்காக வாக்காலத்து வாங்கியது எந்த ஊடகம்?. அந்த அட்டையை வாங்கினால்தான் தி.மு.கவில் சேர்ந்ததாக அர்த்தம்.
டி.ராஜேந்தர், தி.மு.கவில் டிக்கெட் கேட்டார் என்ற செய்திக்கு, ஒரு வாரப் பத்திரிகை, "எந்த படத்திற்கு? என கேள்வி கேட்டு, "வீரம் படத்திற்கா...ஜில்லா படத்திற்காக?" என கமெண்ட் போடுகிறது. அந்த அளவுக்கு தகுதியில்லாமல் போய்விட்டானா இந்த டி.ராஜேந்தர்?.
லட்சிய தி.மு.க தொடங்கிய கொஞ்ச நாளில அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தேன். அடுத்து வந்த தேர்தலில் அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினேன். சீட்டுக்காக டிமாண்ட் செய்தேன். கேட்ட அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறேனோ, இல்லையோ, கூப்பிட்டு பேசும் அளவுக்கு தகுதிக்குரியவனாக இருந்தேனா... இல்லையா? இந்த ராஜேந்தர்.
பா.ஜ.க.வில் இருந்து பெரிய தலைவர் ஒருவர் என்னை வீடு தேடி வந்து சந்தித்து, லட்சிய தி.மு.கவை இணைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதனை வைத்து என்னை "அவங்க கூப்பிட்டாக...இவங்க கூப்பிட்டாக..." என்று பில்டப் செய்து பேச எனக்கு பேச தெரியாது.
பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர என்னை அழைத்தனர். நான் மறுத்து விட்டேன் என் அரசியல் குரு ஆற்காடு வீராசாமி கையை பிடித்து அழைத்து போய் கலைஞரை சந்திக்க வைத்தார். காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததால் நானும் போனேன் என்றார்.
மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி வைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, மறுபடியும் கூட்டணி உருவானால் காட்சி மாறும் என்றார்.