மக்கள் கடலில் மிதந்து இரண்டரை மணி நேர இறுதி ஊர்வலத்திற்கு பிறகு மெரினா வந்த கருணாநிதி உடல்
Recommended Video
சென்னை: மாலை 4 மணிக்கு கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் இதற்காக ராஜாஜிஹாலுக்கு வந்திருந்தது. அதில் புகழுடல் ஏற்றப்பட்டு ஊர்வலம் துவங்கியது. 6.30 மணியளவில் கருணாநிதி உடல் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தடைந்தது.
காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்திற்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர அஞ்சலிக்கு பிறகு சிஐடி காலனிக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது.
இதன்பிறகு அதிகாலை ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு இன்று மாலை 4 மணிக்கு, அண்ணா சமாதி பகுதிக்கு ஊர்வலம் கிளம்பியது. இதையொட்டி, ராஜாஜி ஹாலுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் வந்தது. கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப்பேழையில் அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதில் வைத்து கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக, அண்ணா சமாதி அடைந்துள்ள இடத்திற்கு சென்றது. அய்யகோ உடன்பிறப்பே விடைபெற்றாயோ
என இறுதி ஊர்வலத்தில் திமுகவினர் கதறினர். வங்கக் கடல் ஓரம் நீங்கா துயில் கொள்ள கருணாநிதி பயணம் மேற்கொள்கிறார். கிழக்கே சூரியன் அஸ்தமிக்கும் அதிசயம் இதோ நடக்கப்போகிறது. ஓய்வறியா சூரியன் ஓய்வெடுக்கிறது.
உடன்பிறப்புகளின் கண்ணீர் கடலில் ராணுவ வாகனத்தில் மிதந்து செல்கிறார் கருணாநிதி. சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியே சென்றது கருணாநிதி இறுதி பயணம். முப்படை வீரர்களும், கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.