ரூ.4.77 கோடி பணம் பதுக்கல்: 2வது வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்
சென்னை: கரூரில் ரூ.4.77 கோடி பணம் பதுக்கியது தொடர்பாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் புஞ்சைத்தோட்டக்குறிச்சி அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் அன்புநாதன் வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் இயந்திரம், வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணத்திற்கான ஆவணங்களை இதுவரை அன்புநாதன் சமர்ப்பிக்காததால் அந்தப்பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அன்புநாதன் மனு தாக்கல் செய்தார். அதில், தான் முறையாக வருமான வரி கட்டுவதாகவும், கைப்பற்றப்பட்ட பணம் தான் சம்பாதித்தது என்றும், காவல் துறையினர் தவறுதலாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி பி.என். பிரகாஷ், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கினார்.
வட்டாட்சியர் வழக்கு
இதனிடையே மண்மங்கலம் வட்டாட்சியர் அம்பாயிரநாதன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வருமானவரி சட்டப்படி அன்புநாதன் மீது மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டது.
அன்புநாதன் மீது இதே சம்பவத்திற்காக மீண்டும் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் முன் ஜாமீன்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், அய்யம்பாளையத்தில் என் வீடு, கிடங்கில் 22.4.2016-ல் தேர்தல் பறக்கும்படை போலீஸார் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820, வருமானவரித் துறையினர் ரூ.4.77 கோடி பறி முதல் செய்ததாகவும், வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக இப் பணத்தை பதுக்கி வைத்திருந்த தாகவும் வேலாயுதம்பாளையம் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக் கில் உயர் நீதிமன்ற கிளை எனக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
ஆனால் 20 நாட்கள் கழித்து இதே சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீஸில் மண்மங்கலம் வட்டாட்சியர் மற்றொரு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் என் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பள்ளியில் தாளாளராக இருந்து வருகிறேன். தொழில் போட்டி காரணமாக மொட்டைக் கடிதத்தில் அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் பறக்கும்படை போலீசார் என் வீடு, கிடங்கில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.
மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது. என் மீதான குற்றச் சாட்டு தொடர்பாக ஏற்கெனவே வருமானவரித் துறையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அன்புநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 2 வாரத்திற்குள் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.