கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு… மக்கள் சாலை மறியல்… போலீசார் குவிப்பு.. பதற்றம் அதிகரிப்பு
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாயில் இருந்து எண்ணை கசிவு திடீரென ஏற்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ளது கதிராமங்கலம். இங்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி ஆறு ஓடிய இந்த கிராமத்தில், நெல் விளைந்து செழிப்போடு காணப்பட்ட கிராமம் இன்றைக்கு போரட்டகளமாகியுள்ளது. ஒரு மாத காலத்துக்கும் மேலாக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓஎன்ஜிசி விளக்கம்
ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம் புதியத் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அதனை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
எண்ணெய் கசிவு
இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், குழாயில் இருந்து எண்ணெய் கசியும் இடங்களில் புகை வருவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கதிராமங்கலத்தை சேர்ந்த மக்கள் கோரியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியல்
இதுகுறித்து, எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தங்களது போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசைக் கண்டித்து பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன், மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
போலீசார் குவிப்பு
இதனால், கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.