சனி பகவான் கோவில், ஹாஜி தர்கா, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.. அடுத்தது சபரிமலையில் பெண்கள்?
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதில் உறுதியாக இருப்போம் என கேரளா அரசு அறிவித்திருக்கிறது.
சென்னை: எந்த ஒரு அடிமைத்தனமோ கட்டுப்பெட்டித்தனமோ நீண்டகாலம் நிலைத்துவிடப் போவதில்லை என்பதைத்தான் அண்மைய நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் நடக்கக் கூடாது; தெருக்களிலேயே நடமாடக் கூடாது என்கிற சட்டாம்பிள்ளைத் தனங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டன. இன்னமும் மனித இனத்தின் சரிபாதியான பெண்களை எதன் எதன்பெயராலோ வழிபாட்டு இடங்களுக்கு அனுமதிக்காத போக்கு இருந்து வருகிறது.
தமிழகத்தில் கருவறையில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக கருவறை நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மகராஷ்டிராவின் சிங்கணாப்பூர் சனி பகவான் கோவிலில் தங்களையும் அனுமதிக்க கோரி பெண்கள் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினர்.
பெண்களுக்கும் அனுமதி
சட்டப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்விளைவாக சனி பகவான் கோவிலில் பெண்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது.
தர்காவுக்குள் பெண்கள்
இதேபோல் மும்பை ஹாஜி தர்காவுக்குள்ளும் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். அங்கும் சட்டப் போராட்டத்தின்படி பெண்களுக்கு அனுமதி கிடைத்தது.
தொடரும் முழக்கம்
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மண்ணில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; அதுதான் ஜாதி ஒழிப்பின் முதல்படி என்கிற தந்தை பெரியாரின் முழக்கம் மீண்டும் தமிழகத்தில் கேட்க முடிகிறது; ஆனால் குலதெய்வ கோவில்களை முன்வைத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டனர் என மாய்மால பொய் பிரசாரம் இங்கேதான் செய்யப்படுகிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
கடவுளரின் தேசம் என்கிற கேரளாவில் ஆண்டவனுக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சனை செய்துவிட முடியும் என்கிற மகத்தான வரலாற்று சாதனை படைக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது கேரளா அரசு.
அரசியல் சாசன பெஞ்ச்
உச்சநீதிமன்றத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரளா தேவ்ஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரன், பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வோம் என அதிரடியாக கூறியுள்ளார்.
கேரளா அரசு உறுதியான நிலை
கேரளா அரசின் உறுதியைப் பார்த்தால் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. சீர்திருத்த மகான் நாராயணகுருவின் மண்ணில் இன்னும் எத்தனை எத்தனை யுகப் புரட்சிகள் நடந்தேறுமோ? வரலாற்றின் வசந்தங்கள் தொடரட்டும்!