நடிகர் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது... குஷ்பு கொந்தளிப்பு!
இந்திய திரையுலக நாயகனான நடிகர் சிவாஜிகணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : மேதைகளை மதிக்கத் தெரியாமல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நடிகர் சிவாஜியை அரசு அவமானப்படுத்துவதாக குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடையாறு பகுதியில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவாஜியின் குடும்பத்தாரும் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, சிவாஜியின் ஆன்மாவிற்கு தமிழக அரசு செய்யும் அவமானம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முதல்வரால் மணிமண்டபத்தை திறந்து வைக்க முடியாவிட்டால் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நட்சத்திரத்தை வைத்து மணி மண்டபத்தை திறந்து வைத்து சிவாஜியை பெருமைபடுத்த வேண்டியது தானே என்று சிவாஜி ரசிகர் மன்றத்தினர் கொந்தளிக்கின்றனர்.
இந்நிலையில் சிவாஜி மணிமண்டபம் திறப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகை குஷ்புவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: நடிகர் சிவாஜிகணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது. இந்திய திரையுலகம், தமிழகம், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி.
முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசுக்கு மேதைகளை மதிக்கத் தெரியவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சிவாஜியை அவமரியாதை செய்ய வேண்டாம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.