குழந்தைகளை குறி வைத்து கடத்தும் கும்பல்.. திகிலில் திருச்செந்தூர்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு வரும் குழந்தைகளை குறிவைத்து கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தங்களின் பாதுகாப்பில் இருக்கும் போதே பிள்ளைகள் மாயமாவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலாகும். 5 படை வீடுகளில் குன்றின் மேல் குமரன் அமர்ந்திருக்கும் நிலையில், இங்கு மட்டுமே கடலருகில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.
பக்தர்கள் கூட்டம்
இந்த கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினந்தோறும் ஆயிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, புத்தாண்டு, மாசி திருவிழா, ஆவணி திருவிழா காலங்களில் திருச்செந்தூருக்கு பாதையாத்திரையாகவும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
குடும்பத்தோடு தரிசனம்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கோயிலுக்கு சொந்தமான விடுதிகளிலும், மண்டபங்களிலும் குடும்பத்துடன் தங்கியிருந்து கடலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மாயமான சிறுவன்
சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த ராஜதுரை, பாலசுதா தம்பதியர் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அவர்களின் மூன்றரை வயது மகன் சரண் மண்டபம் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். ஆனால் சற்று நேரத்தில் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பெற்றோர்கள் கதறல்
கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. கடற்கரையில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கோவில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே அதை போலீசார் கண்டு கொள்ளவே இல்லையாம். இதனையடுத்து கோவிலியே தங்கி குழந்தையை தேடி வந்துள்ளனர்.
கண்டு கொள்ளாத போலீஸ்
ஊடக நண்பர்களின் உதவியுடன், காவல்நிலையத்தினை அணுகியுள்ளனர். இதன்பின்னரே புகாரை பெற்றுக்கொண்டுள்ளனர் போலீசார். ஆனாலும் குழந்தை கிடைத்த பாடில்லை.
மாயமான சிறுமி
சிவகாசி ஆணையர் கணபதி மகள் மனிஷா என்பவரும் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த இருவர் குறித்தும் இதுவரை எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
பெண் குழந்தை மாயம்
இந்த நிலையில் தற்போது இளங்கோவன் மகள் அஸ்வினி காணாமல் போய் உள்ளார். திருச்சி காட்டுமன்னூரை சேர்ந்த இளங்கோவன் தனது மனைவி சுதா மற்றும் மகள் அஸ்வினியுடன் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய கடந்த 3ம் தேதி வந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள கல் மண்டபத்தில் அனைவரும் உறங்கினர். மறுநாள் காலையில் எழுந்த பார்த்த போது குழந்தை அஸ்வினியை காணவில்லை.
மகளை தேடும் பெற்றோர்
அருகில் உறங்கிய மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோயில் பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பட்டாணி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
குழந்தை கடத்தல் கும்பல்
கோயில் விழாக்களில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவது இயற்கை. அப்போது யாராவது அவர்களை மீட்டு போலீஸ் நிலையத்திலோ, கோயில் நிர்வாக அலுவலகத்திலோ விட்டு விட்டு போவார்கள். ஆனால் இந்த குழந்தைகள் பற்றி அங்கு எதுவும் தகவல் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளை யாராவது கடத்துகிறார்களா என்று பக்தர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி.விசாரணை
குழந்தைகள் மாயமானது குறித்து திருச்செந்தூருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விசாரணை மேற்கொண்டுள்ளார். அவரிடம் குழந்தைகளை தொலைத்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.
கருப்பு ஆடு யார்
கோவிலுக்குள் பக்தர்கள் போர்வையில் உலாவும் குழந்தை கடத்தல் கும்பல்கள், பெற்றோர்களின் அருகில் இருந்தாலும் அவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு குழந்தைகளை கடத்தி சென்று விடுவதாக கூறப்படுகிறது. எனவே திருச்செந்தூரில் கூட்ட நேரத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.