எங்களுக்கும் வயிறு இருக்கு.. சற்று ஈரத்தை காட்டுங்க.. திமுக நிர்வாகி பேச்சால் சர்ச்சை
திருப்பத்தூர்: எங்களுக்கு 2 சதவீதம் வேண்டாம், 1 சதவீதம் கொடுங்கள். அதுவும் முடியாது என்றால்கால் சதவீதமாவது கொடுங்கள். எங்களுக்கும் வயிறு இருக்கிறது. எங்களுக்கும் சற்று ஈரத்தை காட்டுங்கள் என திருப்பத்தூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவைத் தலைவர் ஸ்ரீதர் பேசியது சர்ச்சையாகியது. பத்திரிக்கையாளர்கள் முன் இப்படி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூரில் உள்ள தனியார் அரங்கில் திருப்பத்தூர் நகர திமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருப்பத்தூர் திமுக மாவட்டச் செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி தலைமை தாக்கினார்.

இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திமுக நகரச் செயலாளரும், ஆவின் பால் தலைவருமான எஸ்.ராஜேந்திரன் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த அவைத் தலைவர் ஸ்ரீதர் பேசுகையில், " அண்மையில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவில் கிளை செயலாளர்கள் தான் ஆணி வேர். அவர்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என பேசினார்.
கிளை செயலாளர்கள்
எனவே, திருப்பத்தூர் நகரத்தில் கிளை செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கின்றன. எனவே, இங்குள்ள திமுக கிளை செயலாளர்களை நகராட்சி கவுன்சிலர்கள் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். அனைத்து கிளை செயலாளர்களுக்கும், 36 வார்டு களையும் பிரித்து கொடுக்க வேண்டும். அப்போது, கட்சி வளர்ச்சி பணிகள் நன்றாக இருக்கும் என்றார்.
தேர்தல்
சில நாட்களுக்கு முன்பு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் 2024-ல் ஒன்றாக நடக்கும் என்றார். அது நடந்து விடும் போல இருக்கு என்றார். அப்போது அவர் இங்கே பத்திரிகையாளர்கள் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டு விட்டு, இருந்தாலும் பரவாயில்லை. நான் எனது மனதில் பட்டதை பேசுறேன் என்றார்.
வயிறு இருக்கு
அப்படி பேச்சைத் தொடர்ந்தவர், இங்குள்ள மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பால்வளத்துறை தலைவர் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். ஏதேதோ சொல்கின்றனர். அதே போல எங்களுக்கும் 2 சதவீதம் வேண்டாம், 1 சதவீதம் கொடுங்கள். அதுவும் முடியாது என்றால் கால் சதவீதமாவது கொடுங்கள். எங்களுக்கும் வயிறு இருக்கிறது. எங்களுக்கும் சற்று ஈரத்தை காட்டுங்கள் என்றார்.
திமுக அவை தலைவரின் இந்த பேச்சால் அரங்கத்தில் சர்ச்சை எழுந்தது. இருக்கையில் இருந்து எழுந்த மாவட்டச் செயலாளர் தேவராஜி, அவை தலைவர் ஸ்ரீதரிடம் இருந்து மைக்கை சட்டென வாங்கிஇ அவரை ஓரமாக உட்காருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த கூட்டத்துக்கு வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியே சென்று விடுங்கள். இது எங்கள் கட்சிக்குள்ளாக நடக்கும் கூட்டம். இதில், நாங்கள் எவ்வளவோ ஆலோசனை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறியதுடன்,பத்திரிக்கையாளர்களை வெளியில் அனுப்பி விட்டு, கதவு களை மூடிவிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications