நேர்மையான அதிகாரி கையை கட்டிப்போடவா 'சிஸ்டம்'.. ரூபாவுக்கு, கிரண்பேடி ஆதரவு குரல்!
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிட மாற்றத்திற்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "நேர்மையான அதிகாரியை பணியிட மாற்றம் மூலம் கட்டிப் போடுவதற்கல்ல சிஸ்டம்" என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவிற்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சகல வசதிகளையும் அனுபவித்து வருவதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்திருந்தார். தமிழக மற்றும் கர்நாடக அரசியல் மட்டுமின்றி, கர்நாடக மாநில சிறைத்துறை மத்தியில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
எனினும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தான் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் விசாரணை நடத்தினால் அதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் ரூபா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சசிகலாவிற்காக சிறையில் விதிமீறல் செய்யப்படுவதை அம்பலப்படுத்திய டிஜிபி ரூபாவிற்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண்பேடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
System does not tie hands of establishmnt to transfer, but officers affected can ensure they keep doing their best wherever. Best message..!
— Kiran Bedi (@thekiranbedi) July 17, 2017
கடந்த14ம் தேதி கிரண்பேடி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ரூபா நூறு யானை பலம் பெற்றதை போல உணர்வதாக தனது நெகிழ்ச்சியை டுவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். இதனிடையே டிஐஜி ரூபா இன்று சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதற்கு கிரண்பேடி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேர்மையான அதிகாரியை இடமாற்றம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டவையல்ல சிஸ்டம், மாறாக பாதிக்கப்பட்ட அதிகாரி சிறப்பாக பணியாற்ற உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு சிறந்த அதிகாரி தன்னுடைய பணிக்காலத்தில் தனக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விதிமீறலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் எப்போதுமே ஒரு அமைப்பு தன்னுடைய நடவடிக்கையிலேயே சிறந்த பணியிட மாற்றத்தைத் தான் பரிசாகத் தருகிறது என்று கிரண்பேடி அந்தக் கருத்துப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.