கீழக்கரையில் வெடிகுண்டு மிரட்டல் புரளியால் 12 பள்ளிகளுக்கு விடுமுறை
கீழக்கரை: கீழக்கரையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரே நாளில் 12 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பின்னர், அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
கீழக்கரை நகராட்சித்தலைவி ராவியத்துல் கதரியாவின் வீட்டு முன் நேற்று காலை 7:00 மணியளவில் ஒரு கடிதம் கிடந்தது. அதில், "வணக்கம், நான் இந்த கீழக்கரையில் ஏதாவது 5 ஸ்கூல்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த இடத்திற்கு நீ செல்லாதே.
ஏனென்றால், நீ ரொம்ப நல்லவ. உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கு. நான் வைத்த வெடிகுண்டை எடுத்திடு. இல்லைனா அடுத்த 11:18 மணிக்கு ஏதாவது ஒரு ஸ்கூலில் பிளாஸ்ட் ஆகிடும். அங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கிறவங்க இறந்துடுவாங்க" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நகராட்சிதலைவி ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனனிடம் புகார் செய்தார். இத்தகவல் காலை 11:30 மணிக்கு 12 பள்ளித்தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்றனர். இதனால் கீழக்கரையே பெரும் பரபரப்புக்குள்ளானது.
டி.எஸ்.பி சிவசங்கர் உத்தரவின்பேரில், எஸ்.ஐ கோட்டைச்சாமி தலைமையில் துப்பறியும் மோப்ப நாய்கள் ஜான்ஸி, ராம்போ ஆகியவற்றுடன் வெடிகுண்டு நிபுணர் குழுவினர், 12 பள்ளிகளிலும் வகுப்பறைகளில் சோதனை செய்தனர்.
நீண்ட நேர சோதனைக்குப்பின், கடிதத்தில் கூறப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. கடிதம் எழுதியவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.