அடக் கொடுமையே.. கொடுங்கையூர் தீவிபத்தில் படுகாயமடைந்த 48 பேரும் "செல்பி" எடுத்து காயமடைந்தவர்களாம்!
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தின்போது ஆர்வத்தில் செல்ஃபி எடுக்க போன நபர்களே தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரியில் தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது ஆர்வத்தில் செல்ஃபி எடுக்க போன நபர்களே, சிலிண்டர் வெடிப்பின்போது படுகாயம் அடைந்துள்ளனர். இதனால்தான் 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்கள் போலீசார்.
கொடுங்கையூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ஆனந்த் என்பவர் 'முருகன் ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் புதிய பேக்கரி ஒன்றை திறந்துள்ளார். நேற்று விற்பனை முடிந்து கடையை ஆனந்த் இரவு 11 மணிக்கு மூடியுள்ளார். மூடப்பட்ட சிறிது நேரத்தில், கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது , கொழுந்துவிட்டு எரிந்த தீ ஜூவாலை தாக்கியதில் விருதுநகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் , படுகாயமடைந்தார்.
தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்ற போது, அங்கு கூடிய ஏராளமானோர் எரியும் கடை முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவர்களை கொடுங்கையூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விமலேஷ் விரட்டியுள்ளார். ஆனாலும் பலர் முண்டியடித்துக்கொண்டு ரோட்டில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

சிலிண்டர் வெடித்து சிதறியது
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, செல்ஃபி எடுப்பதற்காக கடை முன் குவிந்தவர்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 பேர்
தீக்காயம் ஏற்பட்டு உடலில் ஆங்காங்கே சதைகள் பிய்ந்து தொங்கிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 பேர் தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் தாமதமில்லாமல் வழங்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர்
அதே போல ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேரும் , ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேக்கரியின் உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட இருவர் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர் பலி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஏகராஜன் இன்று காலை உயிரிழந்தார். அவரின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை ஆகியவை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications