மணல் அள்ளியதே கொள்ளிடம் இரும்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் - மக்கள் கருத்து
Recommended Video
திருச்சி: மணல் அள்ளியதே கொள்ளிடம் இரும்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் என்று மக்கள் தெரிவித்தனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தின் 18, 21,22-ஆவது தூண்கள் சேதமடைந்ததால் பாலம் நேற்று பாதியாக உடைந்தது.
பெரிய பெரிய தூண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த மக்கள் கண் கலங்கினர். இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாலத்துக்கு தற்போது 93 வயதாகிறது. இந்த பாலத்தின் ஒப்பந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துவிட்டதால் கடந்த 2014 -ஆம் ஆண்டு வேறொரு பாலம் கட்டப்பட்டது.
வேதனை
புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து இதனால் பழைய பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் நடந்து செல்பவர்களும் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த பாலம் இரண்டாக உடைந்துவிட்டது திருச்சி மக்களை வேதனையடைய செய்துள்ளது.
மதுரையில் உள்ளது
இதுகுறித்து செந்தில் மோகன் என்பவர் கூறுகையில் தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட மதுரையில் உள்ள ஆல்பர்ட் பாலத்தை தற்போதும் ஒரு வழிப் பாதையாக பயன்பாட்டில் உள்ளது.
நமக்கான பாலம்
இந்த பாலத்தின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டாலும் இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் மணல் அள்ளப்பட்டதாகும். என்று மனிதன் இயற்கையை துதிக்க மறந்துவிட்டு ஆறுகளில் குழித் தோண்டினானோ அன்றே இது நமக்கு தோண்டப்பட்ட பள்ளமாக மாறிவிட்டது.
வெகு தொலைவில்
தீவாக இருந்த பாலத்தில் இந்த பக்கமும் அந்த பக்கமும் மக்கள் சென்று வந்தனர். இந்த கொள்ளிடம் ஆற்றில் மணலை கொள்ளையடித்ததன் மூலம் அந்த பாலத்தை மண்ணில் புதைத்துவிட்டோம். அதுவாக புதையவில்லை. இது நமக்கு நாமே அடிச்ச சாவுமணி. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை பார்த்துவிட்டு நாம் திரும்பாவிட்டால் இயற்கை இடர்கள் நம்மை நோக்கி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.