கிருஷ்ண ஜெயந்தி... எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் கோபியர்கள் கொண்டாட்டம்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள் கண்ணன், கோபியர்களாய் மாறி நடனமாடி அசத்தினர்.
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை சீரும் சிறப்பாகக் கொண்டாடினர்.
ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர தினத்தில் அவதரித்தார் கண்ணன் என்கின்றன புராணங்கள். இந்த நாளை ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றனர்.
வீடுகளில் அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி.... சின்னஞ்சிறு பாதம் வரைந்து... முறுக்கு, சீடை, அதிரசங்கள், இனிப்பு பட்சணங்கள் செய்து கண்ணனை வணங்குகின்றனர்.
கல்லூரிகளில் கொண்டாட்டம்
வீடுகளில் மட்டுமல்லாது பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளும் கண்ணனாகவும்,ராதைகளாகவும் அலங்கரித்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ராதா கிருஷ்ணன்
மாணவிகள் கிருஷ்ணரைப் போன்று மாறுவேடம் இட்டும், தசாவதார கதாபாத்திரங்களிலும் மேடையில் தோன்றி பிற மாணவிகளுக்கு பக்தி பரவசத்தினை ஏற்படுத்தினர். சிறந்த தோற்றம் கொண்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ண புராணம்
நமது பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் கிருஷ்ண புராணத்தில் இருந்து சில பகுதிகளை நாடகமாகவும், பஜனைப் பாடல்களாகவும் அரங்கேற்றி பிற மாணவிகளுக்கு இவ்விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
பாரம்பரிய விழா
அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று நம்முடைய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதும் மிக முக்கியமானதாகும். இளைய தலைமுறையினர் இது போன்ற நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்று, அதன் அனுபவத்தைப் பெறுவதன் மூலமே இந்தப் பாரம்பரிய பெருமையை அவர்களால் உணர முடியும்.
உற்சாகக் கொண்டாட்டம்
பொங்கல் விழா, ஆடிப் பெருக்கு விழா போன்றவற்றை தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவினையும் நடத்தி, மாணவிகளுக்கு நமது பாரம்பரிய பெருமையை எடுத்துரைப்பதற்கு எங்கள் கல்லூரியில் முக்கியத்துவம் அளித்து வருகிறது,என்று டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் டீன் டாக்டர் அபிதா சபாபதி தெரிவித்தார். இஸ்கான் (ISCKON) அமைப்பின் சென்னை கிளையைச் சேர்ந்த ஸ்ரீ சச்சிதானந்த தாஸ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.