கூடங்குளத்தில் மின் உற்பத்தி 900 மெகாவாட் ஆக அதிகரிப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி 900 மெகா வாட்டை எட்டியுள்ளது. அதை மேலும் அதிகரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் உலையில் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்கே சின்கா, அணுசக்தி கழக தலைவர் புரோகித் தலைமையில் முதல் அணு அணு பிளவுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி 160 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டது. பின் டிசம்பர் 26ம் தேதி 425 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது 1035 மணி நேரத்தில் 35 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அணு மின் நிலையம் தெரிவித்தது. இதை தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் அணு உலையில் 900 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய கடந்த வாரம் அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து காலை நிலவரப்படி 850 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் படிப்படியாக உயர்ந்து 900 மெகா வாட்டை எட்டியுள்ளது. விரைவில் இது 1000 மெகா வாட்டாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அணு சக்தி ஓழுங்கு முறை வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் முதல் அணு உலையில் முழு அளவில் மின் உற்பத்தி என்ற நிலை எட்டப்படும் என்று அணு சக்தி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.