"எங்கிருந்தாலும் வாழ்க"... மகள் தமிழிசை பாஜக தலைவரானது குறித்து குமரி அனந்தன் கருத்து!
சென்னை: மகள் தமிழிசை செளந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவரது தந்தையும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன், எங்கிருந்தாலும் வாழ்க என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். அவரது தந்தை குமரி அனந்தன் பழம்பெரும் காங்கிரஸ்காரர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
சித்தப்பா எச். வசந்தகுமாரும் (இவர்தான் வசந்த் அன் கோவின் உரிமையாளர் - இவரது மகன் வசந்த் நடிகர்) காங்கிரஸ்காரர்தான். வர்த்தக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

கட்சி பாகுபாடில்லாமல் வாழ்த்து
தமிழிசை பாஜக தலைவராகியுள்ளது குறித்து முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் என அனைத்துத் தலைவர்களுமே வாயார வாழ்த்தியுள்ளனர்.

தந்தையின் ஒரு வார்த்தை கருத்து
ஆனால் அவரது தந்தை குமரி அனந்தனோ, எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டும் கூறி விட்டு முடித்துக் கொண்டுள்ளார்.

சித்தப்ஸ்....!
அதேசமயம், சித்தப்பா வசந்தகுமாரோ சற்று நீளமாகவே கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

எதிரி கட்சியாச்ச...
அவர் கூறுகையில், குடும்பம் வேறு. கட்சி வேறு. நான் பரம்பரையாக காங்கிரசில் இருக்கிறேன். பா.ஜ.க நாட்டு நலனுக்கு எதிரான, ஜனநாயக கொள்கைகளுக்கு முரணான கட்சி. என் எதிரி கட்சி.

வருவார்கள் போவார்கள்...
தலைவர்கள் வருவார்கள், போவார்கள் என்று அண்ணன் மகள் குறித்து எதுவும் சொல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications