அனுமதி கிடைத்தது... இன்னும் 10 நாட்களில் கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி!
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மின்உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சுந்தர். அப்போது அவர் கூறியதாவது:-
கிரிட்டிகாலிட்டி...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து 175 நாட்களாக உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் 1,090 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2-வது அணு உலையில் கடந்த மாதத்தில் இருந்து ‘கிரிட்டிகாலிட்டி' எனப்படும் தொடர் அணுப்பிளவு சோதனை நடைபெற்று வருகிறது.
அனுமதி கிடைத்தது...
2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து அனுமதி எதிர்நோக்கி இருந்தோம். தற்போது 2-வது அணு உலையில் இருந்து மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் நேற்று (நேற்று முன்தினம்) அனுமதியை வழங்கி உள்ளது.
மின் உற்பத்தி...
எனவே 2-வது அணு உலையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, இன்னும் 10 முதல் 12 நாட்களில் மின் உற்பத்தி செய்யப்படும். தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
மண் பரிசோதனை...
3-வது, 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 3-வது, 4-வது அணு உலைகள் அமைக்க வருகிற பிப்ரவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இங்கு 5-வது, 6-வது அணு உலைகள் அமைக்க போதுமான இடவசதி உள்ளது. எனவே 5-வது, 6-வது அணு உலைகள் அமைக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்புதல் பெறப்படும்.
சமூக மேம்பாட்டு திட்டம்...
கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 13 கிராமங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை 32 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்" என்றார்.