கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.. மணப்பாறையில் குஷ்பு பிரசாரம்
மணப்பாறை: கரூர் தொகுதி திமுக வேட்பாளர் சின்னச்சாமிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மணப்பாறையில் நேற்று நடிகை குஷ்பு பேசுகையில், அதிமுக அரசின் வேதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
மணப்பாறை பஸ் நிலையப் பகுதியில் குஷ்பு பேசுகையில்,
ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதியின் வளர்ச்சியை பற்றி மட்டும் தான் பேசினேன். ஆனால் இந்தமுறை கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இந்த தொகுதிக்காக எந்த வசதிகளும் செய்து தராததால் அந்த குறைகளை பற்றி பேச உள்ளேன்.
இந்த ஆட்சி காலத்தில் மின்சாரம் தட்டுப்பாடு, தண்ணீர் இல்லாத நிலை, விலைவாசி தொடர்ந்து ஏறி வரும் நிலைமை. இங்கு கட்டப்பட்டுள்ள பாலம்கூட முறையாக கட்டப்படாத நிலை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கல்யாணத்தை பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று, ஆனால் தற்போதைய நிலையில் கல்யாணம் செய்து கொண்டாலும்கூட விலைவாசி உயர்வின் காரணமாக வீடு என்பது கனவாக மட்டுமே இருக்கின்ற நிலை இந்த ஆட்சியில்தான்.
ஆகவே உங்களுக்காக எப்போதும் உழைக்கின்ற இயக்கம் என்றால் அது திராவிட முன்னேற்றக்கழகம் மட்டும்தான் என்பதை கருத்தில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார் குஷ்பு.
வையம்பட்டி பேச்சு
அதேபோல வையம்பட்டியில் நடந்த பிரசாரத்தின்போது குஷ்பு பேசுகையில், தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தவர் கலைஞர், மகளின் நலன் காத்திட வேண்டும், மகளிர் வாழ்க்கை தரம் உயர்ந்திட வேண்டும் என்ற நோக்கில் மகளிருக்கான பல எண்ணற்ற திட்டங்களை வகுத்தவர் கலைஞர்.
ஆனால் தற்போது இயற்கைகூட ஒத்துழைக்காத காரணத்தினால் விவசாயம் பொய்த்து போய்விட்ட நிலையில் விவசாயிகளின் நிலை என்ன என்று கூட தொகுதி பக்கம் வந்து பார்க்காத வேட்பாளருக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.