திமுக, ரஜினி, விஜய் கூட்டத்திற்கு கோர்ட்டில் அனுமதி பெற்றது தான் சட்டம் ஒழுங்கா?: கருணாநிதி
சென்னை: திமுகழக நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சி, நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்படவில்லை. நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற முடிந்தது. இது தான் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதற்கான ஆதாரங்களா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த வாரம் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாடு முதலமைச்சர் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றிருக்கிறது. மூன்று நாட்களிலும் முதலமைச்சர் உரையாற்றியிருக்கிறார்.
மோதல்கள் இல்லை
சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை இங்குள்ளோர் அனைவரும் பெருமையும், திருப்தியும் கொள்ளும் நிலையில் தான் உள்ளது. வகுப்புவாத, தீவிரவாத, மத அடிப்படையிலான மோதல்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்தத் தடைகளையும் விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட நான் அனுமதி அளித்ததால் மட்டுமே இது சாத்தியமானது என்று முதல் அமைச்சர் பேசியிருக்கிறார்.
புழல் சிறை
அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, எத்தனையோ கொலை, கொள்ளைகள், செயின் பறிப்புகள், வழிப்பறி மோசடிகள் நடந்துள்ளன என்பதை புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறேன். புழல் சிறையிலே மொத்தம் 1,250 கைதிகளை வைக்க முடியும். ஆனால் அங்கே இப்போது இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 2,381. அதிலே குண்டர்கள் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் 1,061 பேர்.
தேமுதிக கூட்டம்
தேமுதிக சார்பில் கடலூரில் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுக்குழு தீர்மானங்களை விளக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியபோது போலீசார் சட்டம், ஒழுங்கைக் காரணமாகக் காட்டி அனுமதி மறுத்துவிட்டனர். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நேரத்தில், நீதிபதி சசிதரன் சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தது தவறானது. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு தருவது போலீசாரின் கடமை; எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு
வகுப்புவாத மோதல்கள் இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்கிறார் ஜெயலலிதா. ஆனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2011 செப்டம்பர் 11 ஆம் தேதியன்று பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் 23-12-2011 அன்றே உத்தரவிட்டும் கூட, சி.பி.ஐ. இதனை விசாரிக்கவில்லை.
ராமதாஸ்
மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாசை நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்; கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்; விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; அது போலவே தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்றெல்லாம் இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கைகள் நசுக்கப்பட்டதும், சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அடையாளங்கள் தானா?
பெண்கள் மீதான கொடுமைகள்
தொடர்ந்து கட்டுக்கடங்காமல், பெண்கள் மீதான கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. இதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பெருமைமிகு தமிழ் மாநிலமா?
ரஜினி, விஜய்
திமுகழக நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சி, நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்படவில்லை. நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற முடிந்தது. இது தான் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதற்கான ஆதாரங்களா? ஆனால், ஜெயலலிதா தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் பெருமைமிகு மாநிலமாகத் திகழ்கிறது என்று சொல்லிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரே பொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வதாலேயே, அந்தப் பொய் மெய்யாகிவிடுமா?