உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் வீடு புகுந்து பீரோவை உடைத்து பலே திருட்டு!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்.கனகராஜின் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பதவி வகித்து வருபவர் பால்.கனகராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் வெளியூர் புறப்பட்டுச் சென்றார்.
பால்.கனகராஜ் குடும்பத்தார் வீட்டில் இல்லாதது குறித்து தெரிந்து கொண்ட மர்மநபர்கள் சிலர், அவரது வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோக்களில் இருந்த பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வெளியூர் சென்று வீடு திரும்பிய பால்.கனகராஜ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பால்.கனகராஜ் வீட்டில் மாட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிய காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்த வீடியோ காட்சிகள் உதவியுடன் பால்.கனகராஜ் வீட்டில் திருடிய மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பால் கனகராஜ். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மட்டுமின்றி ஒரு அரசியல் கட்சித் தலைவரும் ஆவார். இவரது தமிழ் மாநிலக் கட்சி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, ஜெயலலிதாவை எதிர்த்து பால் கனகராஜ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.