சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை #ChennaiRains
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கன மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் சென்னையில் மழை பெய்யத் தொடங்கியது. இப்போது வரை சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, இராயபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, தாம்பரம், தரமணி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,தி.நகர், கோடம்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், சோழவரம், செங்குன்றம், மாதவரம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
போக்குவரத்து முடக்கம்
சென்னை முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. சென்னை சாலைகளில் வெள்ளம் போல தேங்கி இருக்கும் மழை நீரினால் போக்குவரத்து முழுதாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல மாநகரப் பேருந்துகள் சாலைகளிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மின்சார இரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட அதிகமான பயணிகள் இரயில்களில் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் இரண்டு அடி வரை தேங்கி உள்ளது. 189 இடங்கள் தாழ்வான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை நான்காவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து 3 மாவட்ட கலெக்டர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது சென்னை மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னையில் விடாமல் கன மழை பெய்வதால் மக்கள் பெரும் பீதி
— Oneindia Tamil (@thatsTamil) November 2, 2017
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு
#ChennaiRains pic.twitter.com/EXKEgak7uj












Click it and Unblock the Notifications