சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை... கடும் வெயிலில் காத்திருந்த பயணிகள் வேதனை - வீடியோ
சென்னையில் அரசு பேருந்துகள்முழுமையாக இயக்கப்படாத காரணத்தால் குறைந்த அளவு பேருந்துகளே ஓடின. இதனால் வேலைக்குச் செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படவில்லை. அதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் பணிக்கொடை, ஓய்வு ஊதியம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடே முடங்கியுள்ளது.
சென்னையில் காலையில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அனைத்து இடங்களுக்கும் ஷேர் ஆட்டோ இல்லாத காரணத்தால் பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருந்தனர்.
ஆனால் சென்னையில் 70 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால், எப்போதோ வருகின்ற ஒரு பேருந்துக்காக பலமணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இன்று சென்னையில் வெயில் அதிகமாக உள்ளது. பேருந்து நிலையங்களில் சரியான நிழல்குடை ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் இந்த கடும் கோடையில் வெயில் நின்று பயணிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர்.
இம்மாதிரியான போராட்டங்களால் எளிய மக்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.