அம்பேத்கர் முதல் வாஜ்பாய் வரை... பாரத ரத்னா பெற்ற தலைவர்கள் “லிஸ்ட்”!
சென்னை: இந்த வருடத்திற்கான பாரத ரத்னா விருதானது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் பாரத ரத்னா விருது, மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
இந்த பாரத ரத்னா விருதினை கடந்த காலங்களில் பெற்றவர்கள் விவரங்களை ஒரு சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
அண்ணல் அம்பேத்கர்:
1990 ஆம் ஆண்டு அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. நாட்டின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர். பொருளாதார நிபுணர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்ட அவர், தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார்.
நெல்சன் மண்டேலா:
அதே வருடத்தில் பாரத ரத்னா பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தியாகசீலர். 1990 இல் அவரது விடுதலைக்குப் பின் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.
மொரார்ஜி தேசாய்:
1991 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பாரத ரத்னா பெற்றார். அவர் நாட்டின் 4 ஆவது பிரதமர். காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தவர். அவரது ஆட்சியில் 1974 இல் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் -இ- பாகிஸ்தான் விருதைப் பெற்ற ஒரே இந்தியர்.
ராஜீவ் காந்தி:
1991 ஆம் ஆண்டு பாரத ரத்னா பெற்ற ராஜீவ் காந்தி நாட்டின் 6 ஆவது பிரதமர். அவரது ஆட்சியில் அறிவியல், தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேல்:
1991 ஆம் ஆண்டு விருது பெற்ற இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சர். சுமார் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர். அவரது மரணத்துக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா:
1992 ஆம் ஆண்டு பாரத ரத்னா பெற்ற ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா இந்திய விமானப் போக்குவரத்து துறையின் முன்னோடி. நாட்டின் முதல் விமானி. டாடா குழுமத் தலைவராக செயல்பட்ட அவர், டாடா அறக்கட்டளை மூலம் ஆசியாவின் முதல் புற்றுநோய் மருத்துவனையை 1941 இல் மும்பையில் நிறுவினார்.
மெளலானா அபுல்கலாம் ஆசாத்:
அதே ஆண்டில் பாரத ரத்னா பெற்ற மெளலானா அபுல் கலாம் ஆசாத்சுதந்திரப் போராட்டத் தலைவர். நாட்டின் முதல் கல்வி அமைச்சர். அவரது பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
சத்யஜித்ரே:
மற்றொரு பாரத ரத்னா விருதாளரான சத்யஜித் ரே மேற்கு வங்க திரைப்பட இயக்குநர். ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர். அவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை.
எம்ஜிஆர்:
1988 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆர், சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பின்னர் தமிழக முதல்வராக பதவி வகித்தவர் இவர்.
அப்துல் கலாம்:
1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற அப்துல் கலாம் நாட்டின் 11 ஆவது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவர், 1974 இல் பொக்ரானில் நடத்தப்பட்ட 2 ஆவது அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்.
அருணா ஆஷப் அலி:
அதே ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்ற அருணா ஆஷப் அலி ஒரு சுதந்திரப் போராட்ட தலைவர். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பாம்பே கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றியவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
குல்சாரி லால் நந்தா:
அதே ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்ற குல்சாரி லால் நந்தா சுதந்திரப் போராட்டத் தலைவர். நேரு மறைவின் போதும், லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போதும் நாட்டின் இடைக்கால பிரதமராகப் பணியாற்றியவர்.
சிதம்பரம் சுப்ரமணியம்:
1998 ஆம் ஆண்டு விருது பெற்ற சிதம்பரம் சுப்பிரமணியம் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது பசுமைப் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
1998 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி. இசைத் துறையில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர். ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
அமர்த்தியா சென்:
1999 ஆம் ஆண்டு விருது பெற்ற அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். 1998 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதார தத்துவங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்:
கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்ததற்காக, பிரபல விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
சி.என்.ஆர்.ராவ்:
இதே போல்விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதாக விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் 2014 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றுள்ளார்.
பீம்சென் குருராஜ் ஜோஷி:
2008 ஆம் ஆண்டு, பண்டிட் பீம்சென் குருராஜ் ஜோஷிக்கு இந்துஸ்தானி இசையில் சிறந்து விளங்கியமைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
லதா மங்கேஷ்கர்:
கடந்த 2001 ஆம் ஆண்டு பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கும், ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது கவுரவிக்கப்பட்டுள்ளது.