தமிழகம், புதுவை உட்பட 117 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
சென்னை: தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவையொட்டி எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 231 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துவிட்டது.
6வது கட்டமாக தமிழகம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் பிரசாரம் ஓய்ந்தது முதல் வாக்குப் பதிவுக்கு முன்பாக வரை 36 மணி நேர 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டும் இருக்கிறது.
ஒரே கட்டமாக தமிழகத்தில்..
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
எந்தெந்த மாநிலங்களில்?
அதேபோல் புதுச்சேரி - 1, அஸாம் - 6, பீகார் - 7, சத்தீஸ்கர் - 7, காஷ்மீர் - 1, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேசம் - 10, மகாராஷ்டிரா- 19, ராஜஸ்தான் - 5, உத்தரபிரதேசம் - 12, மேற்கு வங்காளம் - 6 என 117 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
1988 வேட்பாளர்கள்
117 தொகுதிகளில் மொத்தம் மொத்தம் 1,988 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 5 முனைப் போட்டி
தமிழகத்தில் அதிமுக, திமுக அணி, பாஜக அணி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சியும் மோதுகிறது.
வைகோ, ராசா, தயாநிதி, திருமாவளவன், டி.ஆர்பாலு
தமிழகத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், ஆ. ராசா, தயாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுகவின் தம்பித்துரை, குமார் என பல பிரமுகர்கள் களத்தில் உள்ளனர்.
தேசிய பிரபலங்கள்..
பாரதிய ஜனதா வேட்பாளருமான ஹேமமாலினி, சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி ராஷ்டிரீய லோக்தளம் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள அமர்சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் மகள் பிரியாதத், எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுமித்ரா மகாஜன், தீபா தாஸ் முன்ஷி, பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
காலை 7 மணி முதல்
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மாவோயிஸ்டுகள்
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
195 தொகுதிகள்
வரும் 30, மே 7, மே 12 ஆகிய தேதிகளில் 3 எஞ்சிய 195 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறும்.
ஆலந்தூர் இடைத்தேர்தல்
இதேபோல் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் இன்று நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் வி.என்.வி. வெங்கட்ராமன், தேமுதிகவின் காமராஜ் மற்றும் ஆத்மியின் வேட்பாளராக மூத்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் ஆகியோர் மோதுகின்றனர்.