தமிழகத்தில் நாளை முதல் மே 12ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை
சென்னை: நாளை முதல் வரும் மே மாதம் 12ம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை முதல் வரும் மே மாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அதே நாளில் ஆலந்தூர் சட்டசபை தொகுயில் இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் நாளை முதல் வரும் மே 12ம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை செய்தித்தாள்களில் வெளியிடவோ, தொலைக்காட்சிகளில் காண்பிக்கவோ, ரேடியோவில் தெரிவிக்கவோ கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், எஃப்.எம்.ரேடியோ நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறுயிருப்பதாவது,
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 126 ஏ துணைப் பிரிவு (1) மற்றும் பிரிவு (2)ன்கீழ் ஏப்ரல் 7ம் தேதி காலை 7 மணி முதல் மே 12ம் தேதி மாலை 6.30 மணிவரை தேர்தல் கருத்துக் கணிப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது.
இந்த தேதிகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள், பீகார், குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் ஆகியவை தொடர்பான கருத்துக் கணிப்புகள், கருத்து கணிப்பு முடிவுகள் ஆகியவற்றை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் எப்.எம். ரேடியோ நிறுவனங்கள் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. மேலும், வாக்குப் பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக எந்த ஊடகங்களிலும் இந்த கருத்துக் கணிப்புகளோ, தேர்தல் தொடர்பான அறிவிப்புகளோ, முடிவுகளோ வெளியிடக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.