ஓராண்டுக்குள் தமிழக சட்டசபை தேர்தல்- புதிய ஆளுநர் நியமனமும் டெல்லி வியூகமும்
தமிழக சட்டசபைக்கு ஓராண்டுக்குள் தேர்தல் நடத்துவதற்காகவே புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: தமிழக சட்டசபைக்கு ஓராண்டுக்குள் தேர்தல் நடைபெறக் கூடும் என்றும் இதற்காக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஓராண்டு காலம் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவுக்கு திரும்பிவிட்டார். புதிய ஆளுநர் பன்வாரிவால் புரோஹித் இன்று பதவியேற்றார்.
தமிழக அரசியலில் சில அதிரடிகளைப் புகுத்துவதற்காகவே பன்வாரிலால் வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. அத்துடன் தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓராண்டுக்குள் தேர்தலை எதிர்பார்க்கலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

தமிழக அரசியலில் வித்யாசாகர் ராவ்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார் வித்யாசாகர் ராவ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் பெயர் அடிபட்டது.

போர்க்கொடியின் பின்னணி
சசிகலா தரப்புக்குக் கூடுதல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதற்கும் எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கியதன் பின்னணியிலும் ஆளுநர் அலுவலகம் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்த போது, உட்கட்சி விவகாரம் என ஒற்றை வரியில் கூறி ஒதுங்கிக் கொண்டார் வித்யாசாகர் ராவ்.

வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு
நண்பர் என்ற முறையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சென்று பார்த்தார். அப்போது, பிரதமர் சொல்வதை நான் செயல்படுத்துகிறேன். நானாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் எனப் பேசினாராம் வித்யாசாகர் ராவ்.

ஆளுநர் முன் இருக்கும் சவால்கள்
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநராக நியமித்திருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், புதிய ஆளுநருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல் தொடங்கி எதிர்க்கட்சிகள் சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் வரையில் உரிய நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. ஓராண்டு காலமாக நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோரிக்கையின் காரணமாகவே புரோஹித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பாஜகவுக்காக பணி
இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது, அங்கிருந்த அரசைக் கிரண்பேடி பாணியில் அதிரடியாக கதிகலக்கியவர். பா.ஜ.க வலுவாக இல்லாத மாநிலங்களில் அடிப்படைக் கட்டமைப்பை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் நெருங்கிய நண்பர். எனவே, தமிழக அரசியல் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆளுநர் பன்வாரிலால் மூலமாக டெல்லி செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் விவரங்கள் எதுவும் தமிழக பா.ஜ.க தலைவர்களுக்குத் தெரியாது என விவரித்தார்.

லோக்சபா, சட்டசபைக்கும் தேர்தல்?
மேலும் தமிழகத்தில் புதிய ஆளுநரின் வருகை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. தன்னுடைய போக்கில் தன்னிச்சையாகவே செயல்படத் திட்டமிட்டிருக்கிறாராம் ஆளுநர் பன்வாரிலால். தமிழக சட்டசபை தேர்தலோடு லோக்சபா தேர்தலையும் நடத்த வேண்டும்' என பா.ஜ.க தலைமை திட்டமிட்டிருந்தது. பா.ஜ.க அரசுக்கு 2019 வரையில் அவகாசம் இருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை, லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்கலாம் என தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். இது ஒருவேளை தள்ளிப்போனால், 2018-ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே, அதாவது இன்றில் இருந்து ஓராண்டுக்குள் தமிழக சட்டசபை தேர்தலை நடத்தும் முடிவில் உள்ளதாம் டெல்லி. அதற்கான முன்னோட்டமாகத்தான் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அனுப்பப்பட்டிருக்கிறார் என்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications