நெல்லை அருகே பழங்கால சிலைகள் மீட்பு... பொதுமக்களே கடத்தல் லாரியை மடக்கிப் பிடித்தனர்!
நெல்லை அருகே பழங்கால பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற லாரியை பொதுமக்களே மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி : நெல்லை அருகே பழங்கால பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற லாரியை பொதுமக்களே மடக்கிப் பிடித்துள்ளனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை-தென்காசி சாலையில் நள்ளிரவு பாதுகாப்பு இல்லாத முறையில் கல் செக்குகள் லாரியில் ஏற்று சென்றதாக கூறப்படுகிறது. இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் இதை பார்த்து அதிர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் அந்த பகுதி மக்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதற்கு அடுத்த ஊரில் அந்த பகுதி மக்கள் லாரியை மடக்கி டிரைவரை சிறை பிடித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த கடையம் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். இதில் 9 அடி உயரம், 10 டன் எடையுள்ள கல் செக்குகளை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
போலீசில் டிரைவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் புரோக்கர் கொடுத்த தகவலின் பேரில் அம்பை அருகேயுள்ள வாகைகுளத்தில் இருந்து கல் செக்குகளை ஏற்றி கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். லாரியின் உரிமையாளர் பாலக்காட்டை சேர்ந்த குட்டப்பன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் சிலை கடத்தல் பிரிவு ஆய்வாளர் தூத்துக்குடி கிங்ஸ்லி தேவானந்த், கன்னியாகுமரி கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல் செக்குகள் எடுக்கப்பட்ட இடங்கள் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நள்ளிரவு சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.