லாரி உரிமையாளர் நடு ஆற்றில் வெட்டி கொலை: தூத்துக்குடியில் பதற்றம்
தூத்துக்குடி: ஆற்றில் குளித்து கொண்டிருந்த லாரி உரிமையாளர் ஒருவர் பழிக்குப் பழியாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சேக் அப்துல்காதர். இவரது மனைவி நஸ்ரின் பேகம். இவர்களுக்கு முகமது ஈசா, கிருமாலி என்ற மகன்களும், சுலைமா பீவி என்ற மகளும் உள்ளனர்.
சேக் அப்துல் காதர் குடும்பத்துடன் சேலத்தில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். மகள் சுலைமா பீவி திருமணமாகி சென்னையில் கணவருடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொங்கராயகுறிச்சி பள்ளிவாசல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடப்பதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சேக் அப்துல் காதர் குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது மைத்துனர் இஸ்மாயில், இப்ராகீம் ஆகியோருடன் கொங்கராயகுற்ச்சி தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் சேக் அப்துல் காதரை தூக்கி கொண்டு நடு ஆற்றுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை நடு ஆற்றில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். உடல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி துரை, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணையில் சேக் அப்துல் காதரை கொலை செய்தது கொங்கராயகுறிச்சியை சேர்ந்த செய்யது இப்ராகிம், அவரது உறவினர் ஸ்ரீதர் என தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இந்த கொலை பழிக்கு பழியாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
லாரி உரிமையாளர் நடு ஆற்றில் வெட்டி கொல்லப்பட்டதால் தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications