அடுத்தடுத்து 2 திறன் குறைந்த குண்டுகள் வெடித்தன - ரயில்வே பொது மேலாளர்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவஹாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது வெடித்த குண்டு திறன் குறைந்த குண்டு என்று தெரிய வந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புக்குப் பின்னர் குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குவஹாத்தி -பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 9வது பிளாட்பாரத்திற்கு வந்தபோது குண்டு வெடித்துள்ளது.
அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்துள்ளன. அவை சக்தி குறைந்த குண்டுகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் வெடித்தது என்ன மாதிரியான குண்டு என்பது முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என்றார் மிஸ்ரா.
ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என பொதுமேலாளர் கூறியுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25000, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5000 ரயில்வேதுறை சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம், இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். இன்னும் ஒருமணி நேரத்தில் ரயில்சேவை மீண்டும் தொடங்கும் என்றும் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.