கன்னியாகுமரி மீனவ மக்களின் குரல் ஆர்.கே.நகரில் ஓங்கி ஒலிக்குமா?... என்ன சொல்கிறது கருத்து கணிப்பு?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கன்னியாகுமரி மீனவ மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்பு முடிவுகளில் தெளிவாக தெரிகிறது.
Recommended Video
சென்னை: லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பை பார்க்கும்போது மீனவர்கள் பிரச்சினை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
பண்பாடு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று தெரியவந்துள்ளது. அந்த கணிப்பில் திமுகவுக்கு 33% வாக்குகளும், டிடிவி தினகரனுக்கு 28% வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல் கிடைத்துள்ளது.
தினகரன் 2-ஆம் இடம்
இந்த கணிப்பில் தினகரன் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என்றும் அதிமுக 26 சதவீத வாக்குகளுடன் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கூர்ந்து ஆராய்ந்தோமேயானால் மக்களின் அதிருப்தியை சம்பாதித்த காரணத்தால் அதிமுகவுக்கு ஆர்.கே.நகரில் பேரிடி காத்திருக்கிறது கண்கூடாக தெரிகிறது.
நிவாரணம், மீட்பு பணிகளில் தொய்வு
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று கன்னியாகுமரி மக்கள் கதறுகின்றனர். அவர்களை மீட்பதிலும் சரி நிவாரணப் பணிகளை செய்வதிலும் சரி தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாக மக்கள் புகார் எழுந்துள்ளது.
மத்திய - மாநில அரசுகள் அலட்சியம்
8 நாட்கள் ஆகியும் மீனவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்காமல் மத்திய- மாநில அரசுகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்னியாகுமரி மீனவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சேர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மீனவர்கள் கொந்தளிப்பு
கன்னியாகுமரி மீனவர்களின் அழுகுரல் கேட்டு சென்னை மீனவர்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகின்றன. ஆனால் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சென்னை மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த கொந்தளிப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. இது கருத்து கணிப்பின் மூலம் தற்போது ஊர்ஜிதமாகிவிட்டது.
அதிமுகவுக்கு பின்னடைவு
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியில் ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவ மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மீனவர்களின் வாக்கு வங்கியும் கணிசமாக உள்ளது. அதிமுக உள்கட்சி பிரச்சினை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், எதையும் கண்டுகொள்ளாத அலட்சியபோக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே கன்னியாகுமரி மக்களின் குரல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.