ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு: தேர்தலில் முறைகேடு- ஸ்டாலின் புகார்
சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேர்தல் காலத்தில் பணி நீட்டிப்பு செய்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரிகளை வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அண்மையில் நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் காவல்துறையினரின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்திற்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஆளுங்கட்சியினரின் விதிமீறல்கள் கடைசிவரை நீடித்தன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களுக்குக் காவல்துறை துணை நிற்கும் என்ற சந்தேகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது.
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராமானுஜம் பணி நீட்டிப்பில் உள்ளார். அவர் தமிழக அரசின் தயவை எதிர்பார்த்தே பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே அவரைப் போன்ற அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.
தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகும் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு உயர் பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் முக்கிய தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தாமல் வேறுபிரிவுகளுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.