சசி உடல்நலம் விசாரிக்கவே சென்றோம்... அமைச்சர்கள் பதில்மனு - வழக்கு முடித்து வைப்பு
சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்களையும், அனுமதி கொடுத்த முதல்வரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மதுரை: பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தாங்கள் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறவில்லை என்று முதல்வர், அமைச்சர்களின் பதில் மனுவை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்துவைத்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ஆணழகன் இவர், மறைந்த முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகனாவார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதித்ததையடுத்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 22.2.17 அன்று அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கவுரி சங்கர் அளித்த பேட்டியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவினுடைய ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வழிநடத்தப்படும் என கூறியிருந்தார்.
இதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பிப்ரவரி 28ஆம்தேதி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கவுரிசங்கரின் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறினர்.
இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188-வது சரத்துக்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்த செயல்களுக்கு முதல்வர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. அரசும், முதல்வரும் சசிகலாவின் ஆலோசனைப்படி செயல்படுவது தெரிகிறது. இதற்கு அமைச்சர்கள் தூதுவர்களாக உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டப்படிதான் அரசு இயங்க வேண்டும். ஆனால் சசிகலா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆவார். இதற்காக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும், சட்டசபை செயலருக்கும் கடந்த 13, 16ஆம்தேதிகளில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. , இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நான்கு பேரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
சட்டசபை தலைவருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை வாங்கி கொண்டு பதில் அளிக்காததால் அவரை இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனிடையே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர், அமைச்சர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிறையில் இருந்த சசிகலாவின் உடல்நலம் பற்றி விசாரிக்க மட்டுமே சென்றதாகவும், எந்தவிட ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தனர். ரகசிய காப்பு பிரமாணங்கள் மீறப்படவில்லை என்றும், முதல்வர், அமைச்சர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆணழகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications