தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை... ஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவை: நீதிபதிகள் உறுதி
சென்னை: தமிழக போலீசார் மீது நம்பிக்கையில்லை என்பதால் மெட்ராஸ் ஹைகோர்ட் மற்றும் அதன் மதுரை கிளைக்கு, மத்திய படை பாதுகாப்பு அவசியப்படுகிறது என தலைமை நீதிபதி அமர்வு மீண்டும் உறுதியோடு கூறிவிட்டது.
மெட்ராஸ் ஹைகோர்ட்டு தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில், கடந்த செப்டம்பர் 14ந்தேதி, திடீரென சில வக்கீல்கள், தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி, வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு, கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசில் புகார் செய்யப்பட்டு, அந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை ஹைகோர்ட்டு மற்றும் ஹைகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பை தமிழக போலீசாரிடம் இருந்து பறித்து, சி.ஐ.எஸ்.எப். மாதிரியான மத்திய பாதுகாப்பு படையிடம் ஏன் வழங்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பி, நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஹைகோர்ட்டுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஹைகோர்ட்டு, ஹைகோர்ட்டு மதுரை கிளை ஆகியவற்றை உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளதாகவு, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ஹைகோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களை முழுவதுமாக பட்டியலிட்டார். ஹைகோர்ட் 32 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது எனவும், இங்கு 108 நீதிமன்றங்கள் உள்ளன எனவும், இதன் பாதுகாப்புக்காக, 525 போலீசாரை கொண்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார்.
போலவே, மதுரை ஹைகோர்ட் கிளை 101 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளதாகவும்,. அங்கு 18 நீதிமன்றங்கள் உள்ளன என்றும், அங்கு 217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஹைகோர்ட் மற்றும் மதுரை ஹைகோர்ட் கிளையின் நுழைவு வாயில்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டி காட்டினார்.
கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் அரசு தயாராக உள்ளது. எனவே, கடந்த 14ம் தேதி மத்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்பாக இந்த ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.
இருப்பினும், ஹைகோர்ட்டுக்கு தற்காலிகமாக சில மாதங்களாவது, மத்திய படை பாதுகாப்பு தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை எனவும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது.
எனவே இந்த வழக்கில், தமிழக அரசின் பதிலை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்தியப் பாதுகாப்பு தொடர்பாக அக்டோபர் 30ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டுக்கு தற்காலிகமாக மத்திய படை பாதுகாப்பு தேவை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என நீதிபதி கூறினார். மத்திய படை பாதுகாப்பு கோரிய வழக்கில் தமிழக அரசின் பதிலை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.