சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு இரண்டு மாதத்திற்குள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிறை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: மாநிலம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற இரண்டு மாதத்திற்குள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிறை உத்தரவிட்டுள்ளது.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு, உயர்நீதிமன்றம் மேலும் 15 நாட்கள் கேடு விதித்துள்ளது. வைகோ உள்பட 6 பேர் மனு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
வைகோ வழக்கு
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 13 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்பணியை கண்காணிக்க மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் 65 வழக்கறிஞர்கள், ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றும் நோக்கத்தில், மீதம் உள்ள 19 மாவட்டங்களின் ஆட்சியர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
வைகோ வாதம்
வழக்கறிஞர்கள், ஆணையர்கள் சார்பில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்பாக மாவட்டம்வாரியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, 13 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என்றார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வைகோ, ‘சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றார்.
சீமை கருவேல மரங்களை அகற்றுங்கள்
அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டுமென்றால், சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட 19 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை 19 மாவட்ட நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் ஆணையர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.
நீதிபதிகள் உத்தரவு
மத்திய, மாநில அரசு இடங்கள், தனியார் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மதுரை உட்பட 13 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
களமிறங்கிய வைகோ
விளைநிலங்கள், நீர் ஆதாரமாக விளங்கும் நீர்பிடிப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை 20 நாட்கள் கால அவகாசத்துக்குள் அழிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. வைகோ உள்ளிட்ட சிலரும் களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிறப்பு சட்டம் இயற்றுக
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு மேலும் 15 நாட்கள் கேடு விதித்தனர். மேலும் 2 மாதத்திற்குள் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். சில ஆட்சியர்கள் முறையாக நடவடிக்கை நடவடிக்ரக எடுக்கவில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு 10 சதவிகித மரங்களே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.