ரூ.570 கோடி விவகாரம் சிபிஐ வசம்.. தேர்தல் எப்படி நடந்தது என்பதற்கு இதுவே சான்று: ஸ்டாலின்
சென்னை: திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் நடந்து முடிந்த தேர்தல் எப்படி நடந்தது என்பது நிச்சயமாக வெளியாகும் என திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே, கண்டெயினர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டசபையில் பேச முயற்சி மேற்கொண்டேன். அப்போது சபாநாயகர் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதன் மூலம் நடந்து முடிந்த தேர்தல் எப்படி நடந்தது என்பது நிச்சயமாக வெளியாகும் என்று கூறினார்.
இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தல் நேரத்தில் திருப்பூரில் ரூ. 570 கோடி கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications