பாகுபலி படத்தில் ஜாதியைக் குறிப்பிடும் வசனத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற அருந்ததியர் ஜாதியை இழிவுபடுத்தும் வசனத்தை நீக்காமல் திரையிடும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தம்மன்னா, சத்தியராஜ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டுள்ள திரைப்படம் பாகுபலி.
இதன் டயலாக்குகளை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி எழுதியிருந்தார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், 'எந்த பகடைக்கு பிறந்தவனையும்' என்ற வசனம் வருகிறது. பகடை என்ற வார்த்தை, அருந்ததி சமூகத்தை குறிப்பதாக உள்ளது என்று கூறி, படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைகோர்ட் மதுரை கிளையில் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த பேரறிவாளன் உட்பட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் மனு விசாரிக்கப்பட்டுவருகிறது. மத்திய சென்சார் போர்டிடம் விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், சென்சார் போர்டு பதிலை தாக்கல் செய்துள்ளது. அந்த பதிலில் "குறிப்பிட்ட டயலாக்கை படத்தில் இருந்து நீக்குமாறு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே மனுதாரர்கள் தரப்பிலோ, குறிப்பிட்ட டயலாக்கை நீக்காமலே இன்னும் பல தியேட்டர்கள் படத்தை காண்பித்துவருவதாக கூறியது. எனவே, தயாரிப்பாளருக்கு சென்சார்போர்டு பிறப்பித்த உத்தரவு நகலை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அனுப்பி வைக்க உத்தரவிட்ட ஹைகோர்ட், உத்தரவை மதிக்காமல், குறிப்பிட்ட டயலாக்குடன் படத்தை காண்பிக்கும் தியேட்டர்கள் மீது கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நாளை, புதன்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.