எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி
எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.
சென்னை: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பதிவு போட்ட பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெண் செய்தியாளர்களை மிக மோசமாக இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவை பகிர்ந்திருந்தார் எஸ்.வி.சேகர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அப்பதிவை எஸ்.வி.சேகர் நீக்கியிருந்தார். பின்னர் மன்னிப்பும் கேட்டார். எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.
அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது; எஸ்.வி. சேகரை கைது செய்யவும் தடை விதிக்க முடியாது என கூறி கோடைகால நீதிமன்றத்துக்கு முன்ஜாமீன் கோரும் மனுவை மாற்றி உத்தரவிட்டார்.
இதனால் எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.