மனைவி பெயர் மறைப்பு- மோடிக்கு எதிரான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
சென்னை: சட்டசபை தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடாத குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியுள்ளதாவது:
குஜராத் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர மோடி அந்த தேர்தல்களில் தனது மனைவி பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தல்களின் வேட்புமனுக்களில் மனைவியின் பெயரை மறைத்தது கிரினல் குற்றமாகும். குற்றவாளிக்கு அதிகபட்சமாக 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கலாம்.
எனவே, மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 20ந் தேதி மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நரேந்திர மோடி மீது நடவடிக்கைக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ''மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை 20ந் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விட்டு, மறுநாளே (21ஆம் தேதி) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.