மதுரை: சரியாக தேர்வெழுதாத மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
மதுரை: மதுரையில் சரியாக தேர்வெழுதாததால் மனமுடைந்த மாணவர் ஒருவர் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நடந்து வரும் பள்ளி பொதுத் தேர்வில் சரியாக தேர்வெழுதவில்லை எனக் மனக்கவலையுடன் திரிந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். காயங்களால் உயிருக்குப் போராடிய அவரை அக்கம்பக்கத்தார் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின் மாணவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் தற்கொலை முயற்சி:
அதேபோல், மதுரை புதூர் முத்துராமலிங்கபுரம் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அற்புதராஜ் (32) என்ற கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஆரோக்கிய அற்புதராஜ் சமீபத்தில்தான் மது அருந்துவதைக் கைவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அற்புதராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த இருவேறு தற்கொலை முயற்சிகள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை தாக்கிய கணவர்:
மதுரை கருப்பாயூரணி சீமான் நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நடராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட நடராஜ்-மாரியம்மாள் தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நடராஜ், மாரியம்மாளை கத்தியால் சரமாரியாக வயிற்றில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜை கருப்பாயூரணி போலீஸார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.